சென்னையில் இருந்து ஐதராபாத் சென்றுகொண்டிருந்த சார்மினார் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஆலேரு ரெயில் நிலையத்தை ரெயில் நெருங்கிக் கொண்டிருந்தபோது, S5 பெட்டியில் திடீரென தீப்பிடித்து அடர்த்தியான புகை கிளம்பியுள்ளது.
தீ பரவுவதைக் கண்ட பயணிகள் உடனடியாக அபாயச் சங்கிலியை இழுத்து ரெயிலை நிறுத்தியுள்ளனர்.
சிலர் ரெயில் மெதுவாக ஓடிக்கொண்டிருந்த போதே, அச்சமடைந்த கீழே குதித்தனர். இதில் சிலருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை.
தகவல் அறிந்ததும் ரெயில்வே ஊழியர்களும் தீயணைப்புத் துறையினரும் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
தீ மற்ற பெட்டிகளுக்குப் பரவாமல் தடுக்க, S5 பெட்டி உடனடியாக ரெயிலில் இருந்து தனியாகப் பிரிக்கப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாகவே இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இந்த விபத்தால் அந்த வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டது.