தெற்கு மும்பையின் பூலேஷ்வர் பகுதியில் அமைந்திருக்கும் 'பூலேஷ்வராச்சா ராஜா' விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் சென்ற போது நேற்று இரவு சுமார் 10 மணியளவில் எதிர்பாராத துயரம் நேரிட்டது.
பலராம் மெர்ச்சன்ட் சாலையில் உள்ள கபூதர்கானா அருகே ஜெய் அம்பே சௌக் வழியே ஊர்வலம் சென்று கொண்டிருந்த போது, 22 அடி உயரமுள்ள பிரம்மாண்ட விநாயகர் சிலை தாங்கி நிற்கும் இரும்புச் சட்டகத்தில் இருந்த போல்ட்டுகள் மற்றும் நட்டுகள் தளர்ந்ததால் சிலை அப்படியே நிலைகுலைந்து பக்தர்கள் கூட்டத்தின் மீது சரிந்தது.
இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், சங்கேத் நெவ்சே (33) மற்றும் பிரிஜேஷ் ஹேமந்த் ஜோஷி (30) ஆகிய இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், வைபவ் கெனந்த் (38), பவன் சௌராசியா (25), குணால் காஷித் (26) மற்றும் லாவண்யா (5), திவ்யா (7) ஆகிய இரு சிறுமிகள் உட்பட 5 பேர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களின் நிலை தற்போது சீராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் அறிந்ததும் மும்பை தீயணைப்புத் துறை, காவல்துறை, போக்குவரத்து காவலர்கள் மற்றும் 108 ஆம்புலன்ஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். இச்சம்பவம் தொடர்பாக வி.பி.ரோடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விநாயகர் சிலையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் இரும்பு சட்டகத்தின் தரம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.