கர்நாடகாவின் பெலகாவியில் நடைபாதையில் கடை அமைப்பது தொடர்பாக ஏற்பட்ட சண்டையில் வியாபாரியின் மூக்கை சக வியாபாரி நறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெலகாவி நகரின் காடே பஜாரின் காஞ்சர் கல்லி என்கிற பகுதியில் தனது கடையை அமைக்க 42 வயதான சுஃபியான் பதான் விரும்பினார். அதற்கான முயற்சியில் ஈடுபட்டபோது, மற்றொரு வியாபாரியான அயன் தேசாயுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இது வாக்குவாதமாக தொடங்கி பின்னர் இருவருக்கிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
சண்டையின்போது, அயன் தேசாய் திடீரென கத்தியை எடுத்து சுஃபியானின் மூக்கை நறுக்கினார். இதில், சுஃபியான் பலத்த காயமடைந்தார். மேலும், இந்த கைகலப்பின்போது சமீர் பதான் என்ற நபரும் காயமடைந்துள்ளார்.
இந்நிலையில், சுஃபியான் தற்போது பெலகாவியின் பிஐஎம்எஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான தேசாய்யை தேடி வருகின்றனர்.