ஜார்க்கண்ட் மற்றும் ஒடிசா உள்ளிட்ட பல மாநிலங்களில் மாவோயிஸ்ட் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்தவரும், ரூ. 1 கோடிக்கும் அதிகமான சன்மானம் அறிவிக்கப்பட்டவருமான முக்கிய மாவோயிஸ்ட் மிசிர் பெஸ்ரா, செவ்வாய்க்கிழமை மாலை ஜார்க்கண்டின் தன்வாத் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கிரிதி மாவட்டத்தின் ஹர்லாடி பகுதியை சேர்ந்த பெஸ்ரா, தன்வாத் மாவட்டத்தின் பர்வாடா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மனியாடிஹ் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக காவல் அதிகாரி ஒருவர் கூறினார்.
இந்த நடவடிக்கையின்போது பெஸ்ராவுடன் மேலும் இரண்டு மாவோயிஸ்டுகளும் கைது செய்யப்பட்டனர். முன்னதாக, நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் ஜார்க்கண்ட் காவல்துறையினரிடம் 16 மாவோயிஸ்டுகள் சரணடைந்தனர்; இவர்களில் ஆறு பேர் மீது மொத்தம் ரூ. 39 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சரணடைந்தவர்களில், 128 வழக்குகளில் தேடப்பட்டு வந்தவரும், ரூ. 15 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டவருமான சந்தோஷ் மஹ்தோ (எ) வாசுதேவ் தா (எ) திலீப் என்பவரும் அடங்குவார் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
சரணடைந்தவர்களில் இரண்டு 'துணை மண்டலக் குழு' உறுப்பினர்களும், இரண்டு 'பகுதிக் குழு' (area committee) நிர்வாகிகளும் அடங்குவர் என்றும் அவர் கூறினார்.