எதிரி நாடுகளின் ஏவுகணை அச்சுறுத்தல்களை முறியடிக்கும் நோக்கில், இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு(DRDO), "பல அடுக்கு பாலிஸ்டிக் ஏவுகணை பாதுகாப்பு" (Multi-layered Ballistic Missile Defence - BMD) திறனை நிரூபிக்கும் வகையில் அடுத்தடுத்து 3 ஏவுகணை சோதனைகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இந்தச் சோதனைகள் நேற்றும், நேற்று முன்தினமும் மேற்கொள்ளப்பட்டன. இதன் முக்கிய அம்சங்களை என்ன என்பதை விரிவாகக் காணலாம்.
இந்தச் சோதனையின் போது, விண்வெளியில் ஏவப்பட்ட இலக்குகளை நோக்கி பாய்ந்த இந்தியாவின் 'இன்டர்செப்டர்' ஏவுகணைகள், அவற்றை நடுவானிலேயே துல்லியமாகத் தாக்கி அழித்தன.
வளிமண்டலத்திற்கு வெளியேயும், வளிமண்டலத்திற்கு உள்ளேயும் வரும் எதிரி ஏவுகணைகளைத் தாக்கும் இருவேறு இன்டர்செப்டர் ஏவுகணைகள் இதில் சோதிக்கப்பட்டன. இவை 2,000 கி.மீ முதல் 5,000 கி.மீ வரை பாயும் நடுத்தர மற்றும் நீண்ட தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளைத் தடுக்கும் திறன் கொண்டவை.
இந்த ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் முற்றிலும் இந்தியாவின் அதிநவீன உள்நாட்டுத் தொழில்நுட்பத்தைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த வெற்றிகரமான சோதனையின் மூலம், கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஆயுத ஏவுகணைகளைக்கூட நடுவானில் தடுத்து அழிக்கும் திறன் கொண்ட உலகின் மிகச் சில முன்னணி நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்துள்ளது.
பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையுடன் கூடுதலாக, இந்தியக் கடற்படையின் பலத்தை அதிகரிக்கும் வகையில், நடுத்தர தூரம் சென்று கப்பல்களைத் தாக்கும் என்ற புதிய கடற்படை ஏவுகணையின் முதல் சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இது இந்தியாவின் கடல்சார் பாதுகாப்புத் திறனை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்த மகத்தான சாதனைக்காக DRDO விஞ்ஞானிகளுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். "இந்த அதிநவீன தொழில்நுட்பங்கள் இந்தியாவின் தேசிய பாதுகாப்பையும், தற்சார்பு பாதுகாப்புத் திறனையும் புதிய உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், DRDO தலைவர் ராஜேஷ் குமார் சிங் பாதுகாப்புத் துறை மற்றும் தொழில்துறை கூட்டாளர்களின் ஒருங்கிணைந்த உழைப்பைப் பாராட்டி, இச்சோதனை மிகக் குறுகிய காலத்தில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.