மேற்கு வங்காளத்தில் கடந்த 23-ந் தேதி சட்டமன்ற தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. அங்கு பல்வேறு இடங்களில் பா.ஜ.க, திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியினர் இடையே மோதல் நடந்தது. அசன்சோல் பகுதியில் நடந்த வன்முறையில் காங்கிரஸ் கட்சி தொண்டர் தேப்தீப் சட்டர்ஜி கொல்லப்பட்டார்.
அவர் அசன்சோல் வடக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளரின் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் ஆவார். இந்த நிலையில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில் கூறி இருப்பதாவது:-
திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்களால் தேப்தீப் சட்டர்ஜி கொல்லப்பட்டிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
இன்றைய மேற்கு வங்கத்தில் ஜனநாயகம் இல்லை; மாறாக, திரிணாமுல் காங்கிரசின் பயங்கரவாத ஆட்சியே நடந்து வருகிறது. வாக்குப்பதிவு முடிந்த பிறகு, எதிர்க்குரல்களை மிரட்டுவது. தாக்குவது மற்றும் ஒடுக்குவது ஆகியவையே திரிணாமுல் காங்கிரசின் அடையாளமாக மாறிவிட்டன.
காங்கிரஸ் கட்சியின் அரசியல் ஒருபோதும் வன்முறையை அடிப்படையாகக் கொண்டதாக இருந்ததில்லை. எதிர்காலத்திலும் அவ்வாறு இருக்காது.
இந்தியாவின் அகிம்சைப் பாரம்பரியத்திற்கு களங்கம் விளைவிக்கும் இத்தகைய அரசியலுக்கு முன்னால் நாங்கள் ஒருபோதும் பணியமாட்டோம். நீதி நிலைநாட்டப்படும்.
இவ்வாறு அவர் பதிவிட்டு உள்ளார்.