இந்தியா

இலவசமாக தண்ணீர் தர மறுத்த உணவகம்.. அபராதம் விதித்த நீதிமன்றம்

இலவசமாகத் தண்ணீர் வழங்க மறுத்து விலை கொடுத்துத் தண்ணீர் பாட்டிலை வாங்குமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர்.இலவசக் குடிநீர் வழங்குவது விதிமுறை என்று சுட்டிக்காட்டியும் ஹோட்டல் நிர்வாகம் அதனை ஏற்கவில்லை.

மாலை மலர்

அண்மைக் காலமாக உயர்தர உணவகங்களில் தண்ணீரும் விலை கொடுத்து வாங்கும் சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில் வாடிக்கையாளருக்கு இலவசக் குடிநீர் வழங்க மறுத்து, விலை கொடுத்து பாட்டில் தண்ணீரை வாங்க வற்புறுத்திய ஓட்டல் ஒன்றுக்கு நுகர்வோர் நீதிமன்றம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

 அரியானா மாநிலம் பரிதாபாத்தில் உள்ள கார்டன் கிரில்ஸ் 2.0 என்ற ரெஸ்டாரண்டிற்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம், ஆகாஷ் சர்மா என்பவர் சென்றுள்ளார்.

அங்கு அவர் குடிநீர் கேட்டபோது, ஓட்டல் ஊழியர்கள் இலவசமாகத் தண்ணீர் வழங்க மறுத்துள்ளனர்.

அதற்குப் பதிலாக, விலை கொடுத்துத் தண்ணீர் பாட்டிலை வாங்குமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர்.

இலவசக் குடிநீர் வழங்குவது விதிமுறை என்று சுட்டிக்காட்டியும் ஹோட்டல் நிர்வாகம் அதனை ஏற்கவில்லை. இறுதியில் அவர் 40 ரூபாய் கொடுத்து இரண்டு பாட்டில் தண்ணீரை வாங்கியுள்ளார்.

இது தொடர்பாக ஆகாஷ் சர்மா நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தில் புகார் அளித்தார்.

இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம், வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக 3,000 ரூபாய் இழப்பீடும், அவர் தண்ணீர் பாட்டிலுக்காகச் செலவழித்த 40 ரூபாயைத் திரும்ப வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.