இந்தியா

திருப்பதியில் மாற்று மத பணியாளர்களை நீக்க புதிய அறங்காவலர் குழு தலைவர் முடிவு

மாற்று மதத்தினரை நீக்குவது என்பது மிகவும் சிரமமான காரியம்.திருப்பதியில் நேற்று 63,987 பேர் தரிசனம் செய்தனர்.

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவில் அறங்காவலர் குழு தலைவராக பி.ஆர்.நாயுடு, குழு உறுப்பினர்கள் 24 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அறங்காவலர் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பி.ஆர்.நாயுடு கூறியதாவது:-

திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவராக நியமிக்கப்பட்ட தற்காக முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, துணை முதல் மந்திரி பவன் கல்யாண், மந்திரி லோகேஷ் உள்ளிட்டவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அறங்காவலர் குழு தலைவராக வேலை செய்வதை பாக்கியமாக கருதுகிறேன்.

கடந்த ஆட்சி காலத்தை போல் அல்லாமல் வெளிப்படை தன்மையாகவும் உண்மையாகவும் பாடுபடுவேன்.

தேவஸ்தானத்தில் வேலை செய்பவர்கள் அனைவரும் இந்துக்களாக இருக்க வேண்டும்.

தேவஸ்தானத்தில் பணியாற்றும் மாற்று மதத்தினரை வேறு அரசு பணிக்கு மாற்றுவதா அல்லது கட்டாய ஓய்வு கொடுத்து வீட்டிற்கு அனுப்புவதா என்பது குறித்து மாநில அரசுடன் கலந்து ஆலோசிக்கப்படும்.

மாற்று மதத்தினரை நீக்குவது என்பது மிகவும் சிரமமான காரியம். இருப்பினும் இந்த முடிவை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

திருப்பதியில் நேற்று 63,987 பேர் தரிசனம் செய்தனர். 20,902 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ2.66 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.