இந்தியா

1 வாக்கு வித்தியாசத்தில் வென்ற தவெக எம்எல்ஏவுக்கு தடை விதித்த விவகாரம்.. உயர்நீதிமன்றத்தை சாடிய உச்சநீதிமன்றம்

நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ள கூடாது என தடை விதித்தது.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் பெரியகருப்பனை 1 வாக்கு வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி தோற்கடித்தார்.

தபால் வாக்கு தவறான எண்ணப்பட்டதாக பெரியகருப்பன் தரப்பில் இந்த வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதை நேற்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ள கூடாது என தடை விதித்தது.

இதை எதிர்த்து தவெக தரப்பு உச்சநீதிமன்றம் சென்றது. இந்த வழக்கு நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, "வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட ஒரு சட்டமன்ற உறுப்பினரை நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கெடுக்க தடை விதித்தது தவறானது என சீனிவாச சேதுபதி தரப்பில் வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்தனர்.

மேலும் இவ்வாறான ஒரு உத்தரவை பிறப்பித்திருக்கக்கூடாது, இது கடுமையானது கூறிய நீதிபதிகள் வழக்கு விசாரணையை மேலும் 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.