இந்தியா

‘இந்தியா வந்துள்ள 92,700 டன் எரிவாயு 2 நாட்களுக்குக் கூட போதாது’ - ப. சிதம்பரம்

இந்தியா வந்துள்ள 92700 மெட்ரிக் டன் எல்பிஜி, நாட்டின் ஒட்டுமொத்த தேவையில் 1.25 முதல் 1.6 நாட்களுக்கு மட்டுமே போதுமானது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

மேற்காசியப் பகுதியில் நிலவும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், ஈரான் மற்றும் ஓமன் நாடுகளுக்கு இடையே உள்ள ஹார்முஸ் நீரிணையை கடந்து இரண்டு எரிவாயு மற்றும் 1 எண்ணெய் சரக்குக் கப்பல்கள் இந்தியாவை வந்தடைந்துள்ளன.

நாளையும் சில எண்ணெய் கப்பல்கள் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்செய்தி மக்களுக்கு பெரும் ஆறுதலை தந்துள்ளது.

இந்நிலையில், இரண்டு கப்பல்களில் எரிவாயு வந்தாலும் அவை இந்தியாவின் ஒன்றரை நாள் தேவைக்கான அளவு மட்டுமே என முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ளப் பதிவில்,

“2026 மார்ச் 14-17 தேதியிட்ட அறிக்கைகளின்படி, இந்தியக் கொடி ஏந்திய ஷிவாலிக் மற்றும் நந்தா தேவி ஆகிய இரண்டு எல்பிஜி சரக்குக் கப்பல்கள், ஹார்முஸ் ஜலசந்தியை வெற்றிகரமாகக் கடந்துள்ளன. இவை மொத்தம் 92,700 மெட்ரிக் டன் சமையல் எரிவாயுவை ஏற்றி வந்துள்ளன.

மொத்த எல்பிஜி அளவு 92,700 மெட்ரிக் டன் (ஒவ்வொரு கப்பலும் 46,000 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான எடையைச் சுமந்து வந்தன).

இந்த அளவு, இந்தியாவின் ஒட்டுமொத்த சமையல் எரிவாயு தேவையுடன் ஒப்பிடும்போது சுமார் 1.25 முதல் 1.6 நாட்களுக்கு போதுமானதாகும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்தியாவிற்கு மட்டும் ஈரான் அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.