இந்தியா

நிலையற்ற, வழக்கத்திற்கு மாறானவர் டிரம்ப்: வரி விதிப்பால் 1.35 லட்சம் பேர் வேலை இழப்பு- சசி தரூர் விமர்சனம்

உலகத் தலைவர்களில் யாராவது ஒருவர், தான் நோபல் பரிசுக்கு தகுதியானவர் எனக் கூறியதை நீங்கள் கேட்டுள்ளீர்களா?.இந்தியா- ரஷியா பொருளாதாரம் செத்துப்போனது எனக் கூறியதை கேட்டதுண்டா?.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்திய பொருட்கள் மீது 50 சதவீதம் வரி விதித்துள்ளார். இதனால் இந்திய ஏற்றுமதி கடுமையாக பாதித்துள்ளது. குறிப்பாக குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள ரத்தின கற்கள் மற்றும் நகைத்துறை, கடல்உணவு, உற்பத்தி துறைகள் அதிக அளவில் பாதித்துள்ளது.

இந்த நிலையில் CREDAI மாநாட்டில் காங்கிரஸ் கட்சி எம்.பி. சசி தரூர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அமெரிக்க அதிபர் அடிக்கடி தனது மனநிலையை மாற்றக்கூடிய தனிநபர். அமெரிக்க சிஸ்டம் அந்நாட்டு அதிபருக்கு அதிக சுதந்திரத்தை கொடுத்துளளது. இவருக்கு முன்னதாக 44 அல்லது 45 அதிபர்கள் வெள்ளை மாளிகையில் இருந்துள்ளனர். ஒருவர் கூட இவரை போன்று பழக்க வழக்கம் கொண்டவராக இருந்ததை பார்த்ததில்லை.

எல்லா நிலைகளிலும் வழக்கத்திற்கு மாறான அதிபர். உலகத் தலைவர்களில் யாராவது ஒருவர், தான் நோபல் பரிசுக்கு தகுதியானவர் எனக் கூறியதை நீங்கள் கேட்டுள்ளீர்களா?. அல்லது அனைத்து நாட்டு தலைவர்களும் என்னுடைய A**யை முத்தமிட வேண்டும்? அல்லது இந்தியா- ரஷியா பொருளாதாரம் செத்துப்போனது எனக் கூறியதை கேட்டதுண்டா?. டிரம்ப் வழக்குத்திற்கு மாறானவர். அவருடைய நடத்தையை வைத்து எங்கள் செயல்திறனை மதிப்பிட வேண்டாம் என்று நான் உங்களிடம் கெஞ்சுகிறேன்.

இந்தியா ஏற்றுமதி சந்தைகளை பன்முகப்படுத்த வேண்டும். சூரத்தின் ரத்தினக் கற்கள் மற்றும் நகைத் துறையிலும், கடல் உணவு மற்றும் உற்பத்தித் துறையிலும் ஏற்கனவே 1.35 லட்சம் வேலைகள் இழக்கப்பட்டுள்ளன.

ஆரம்ப 25 சதவீத வரி பல பொருட்களை சாத்தியமற்றதாக்கியது. மேலும் கூடுதலாக 25 சதவீத அபராதம் அமெரிக்க சந்தையில் போட்டியிடுவதை கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக்கியுள்ளது. கூடுதல் வரி என்பது ஒரு வரி அல்ல. இது ரஷிய எண்ணெயை வாங்குவதற்கான தடைகள். சீனா அதிகமாக இறக்குமதி செய்யும்போது, இந்தியாவுக்கான வரி விதிப்பு நியாயமற்றது.

இவ்வாறு சசி தரூர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT