இந்தியா

மேற்கு வங்கத்தில் பரபரப்பு..! தொழில் அதிபர்கள் வீடு உள்பட 9 இடங்களில் ED ரெய்டு

மேற்கு வங்க மாநில சட்டசபைக்கு முதல்கட்ட தேர்தல் கடந்த 23-ந்தேதி நடைபெற்றது.

மேற்கு வங்க மாநிலத்தில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட பொதுவிநியோக திட்டத்தில் 30 சதவீதம் ரேஷன் பொருட்கள் முறை கேடாக வெளிச்சந்தைக்கு திருப்பி விடப்பட்டதாக எழுந்த புகார் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

ரேஷன் பொருட்கள் ஊழல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அரசு கோதுமையை முறைகேடாகப் பயன்படுத்தியதும், ஏழைகளுக்கான ரேஷன் பொருட்களை குறைந்த விலையில் வாங்கியதும், பின்னர் அவற்றை வெளிச்சந்தையில் சட்ட விரோதமாக விற்றதும் தெரியவந்தது.

ஆரம்பத்தில் சுங்கத் துணை ஆணையர் புகாரின் அடிப்படையில், பசிர்ஹாட் போலீசாரால் 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக மேற்கு வங்க முன்னாள் உணவுத்துறை அமைச்சர் ஜோதி பிரியா மல்லிக் மற்றும் பலரை அமலாக்கத்துறை கைது செய்து உள்ளது.

இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் உள்ள கொல்கத்தா, பர்தமான் மற்றும் ஹப்ரா ஆகிய பகுதிகளில் 9 இடங்களில் திடீர் சோதனை நடைபெற்றது. வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள தொழில் அதிபர் பார்த்தசாரதியின் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

ரேஷன் ஊழல் தொடர்பான முறைகேடுகள் மற்றும் பண பரிவர்த்தனைகள் தொடர்பான ஆதாரங்களைச் சேகரிப்பதற்காக இந்தச் சோதனைகள் நடத்தப்படுகின்றன என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.

மேற்கு வங்க மாநில சட்டசபைக்கு முதல்கட்ட தேர்தல் கடந்த 23-ந்தேதி நடைபெற்றது. 2-ம் கட்ட தேர்தல் வருகிற 29-ந்தேதி நடைபெற உள்ள நிலையில் அமலாக்கத்துறையினரின் சோதனை மேற்கு வங்க அர சியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.