தெலுங்கானா மாநிலம், மெகபூபா பாத் மாவட்டம், நாகசாலாவை சேர்ந்த லாரி டிரைவர் பீமேஸ்வர் (வயது 32) கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேலைக்கு செல்வதாக வீட்டில் உள்ளவர்களிடம் கூறிவிட்டு சென்றார். ஆனால் அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் பீமேஸ்வரை கண்டுபிடிக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று காலை அப்பகுதியில் உள்ள குளத்தில் பீமேஸ்வர் பிணமாக மிதந்தார். பீமேஸ்வர் பிணத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஜட் சர்லா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனை ஊழியர்கள் பீமேஸ்வர் பிணத்தை பிரேத பரிசோதனைக்காக பிண அறையில் வைத்தனர்.
அப்போது பிணவறைக்குள் புகுந்த நாய் ஒன்று பீமேஷ்வர் பிணத்தை கடித்துத் திண்று கொண்டு இருந்தது. இதனைக் கண்ட ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவு செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.
வீடியோவை கண்ட அதிகாரிகள் பீமேஸ்வர் பிணத்தை இரவு முழுவதும் ஆம்புலன்ஸ்சில் வைத்திருந்து பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.