இந்தியா

ஆசிரியர் தகுதி தேர்வு டெட் வினாத்தாள்களை காலணிக்குள் மறைத்து கடத்திய ஊழியர்கள்

மகாராஷ்டிராவில் டெட் தேர்வு வினாத்தாள்களை கடத்தி விற்பனை செய்த 18 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான வினாத்தாள்களை அச்சகத்தில் இருந்து காலணிகளில் கடத்தி, 8,000 ரூபாய்க்கு விற்பனை செய்த வழக்கில், மொத்தம் 18 பேர் மீது போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

மகாராஷ்டிரா டெட் தேர்வு

ஆக்ராவில் உள்ள மஹிம் பத்ரன் பிரைவேட் லிமிடெட் என்ற அச்சகத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தின் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான வினாத்தாள்கள் அச்சிடப்பட்டு வந்தன.

அப்போது அந்த அச்சகத்தில் வேலை பார்த்துவந்த இரண்டு ஊழியர்கள் வினாத்தாள்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளனர்.

இதையடுத்து அவர்கள் அச்சகத்தில் பாதுகாப்பு சோதனைகள் அதிகமாக இருந்ததால், தங்கள் காலணிகளில் மறைத்து வைத்து வினாத்தாள்களை வெளியே கொண்டு வந்துள்ளனர்.

தேர்வின் நேர்மையை பாதுகாப்பதற்காக, தேர்வு நாளன்று தேர்வர்கள் தங்கள் வினாத்தாள்களை தேர்ந்தெடுக்கும் வகையில் நான்கு தனித்தனி தொகுப்புகளாக தயாரித்திருந்தனர்.

ஆனால் அச்சகத்தில் வேலை பார்த்த ஊழியர்கள் மற்றும் ஒரு முன்னாள் பணியாளரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மீறி, அந்த நான்கு வினாத்தாள் தொகுப்புகளையும் தங்கள் காலணிகளுக்குள் மடித்து வைத்து திருட்டுத்தனமாக வெளியே கொண்டு வந்துள்ளனர்.

இதையடுத்து ஊழியர்கள் அந்த வினாத்தாள்களை 8,000 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

3 பேர் கைது

மகாராஷ்டிராவில் பிவண்டி பகுதியை சேர்ந்த ஒருவருக்கு, ஆசிரியர் தகுதி தேர்வு வினாத்தாள்களை விற்பனை செய்ய முயன்றபோது, மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.

முன்னாள் பயிற்சி வகுப்பு ஆசிரியரான குப்தா என்பவரை மாநிலங்களுக்கு இடையேயான மோசடியின் முக்கிய குற்றவாளியாக போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

அவருக்கு ஒடிசாவில் முன்னதாக நடந்த மற்றொரு தேர்வுத்தாள் கசிவு வழக்கிலும் தொடர்பு இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குற்றப்பத்திரிகை தாக்கல்

இதைத்தொடர்ந்து பிவண்டியில் உள்ள உள்ளூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், 18 பேர் குற்றவாளிகளாக போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த வழக்கில் இதுவரையில் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளிகளான அசோக் சாவ் மற்றும் பிரகாஷ் மிசாலை போலீசார் தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT