நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று டெல்லி சென்ற தமிழக முதலமைச்சர் விஜய், ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதியை சந்தித்தார். சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியையும் சந்தித்து பேசினார்.
நிதி ஆயோக் கவுன்சிலின் 11-வது கூட்டம் டெல்லி ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் உள்ள கலாசார மையத்தில் இன்று காலை முதல் மாலை வரை நடக்கிறது. இந்த கூட்டத்துக்கு பிரதமர் மோடி தலைமை தாங்குகிறார். இதில் அனைத்து மாநில முதல்-மந்திரிகளும் கலந்து கொள்கிறார்கள்.
இதற்காக முதலமைச்சர் விஜய் நேற்று தனி விமானத்தில் டெல்லி சென்றார். இது முதலமைச்சராக பதவியேற்ற பிறகு அவரது 2-வது டெல்லி பயணம் ஆகும். அவர் விமான நிலையத்தில் இருந்து மதியம் 1 மணி அளவில் தமிழக அரசு இல்லம் வந்தார். அவரை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சாய்குமார், டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் தலைமை உறைவிட ஆணையர் ஜெயா, உதவி ஆணையர் ஆசிஷ்குமார் ஆகியோர் வரவேற்றனர்.
இதனைத்தொடர்ந்து போலீஸ் மரியாதையை ஏற்றுக்கொண்டு அரசு இல்லத்தின் உள்ளே சென்று தனது அறையில் ஓய்வு எடுத்தார்.
இதன்பிறகு மாலை 6.30 மணி அளவில் சோனியா காந்தி இல்லத்துக்கு முதலமைச்சர் விஜய் சென்றார். அங்கு சோனியா காந்தியையும், ராகுல் காந்தியையும் சந்தித்து சில நிமிடங்கள் பேசினார். தனது ஆட்சிக்கு வழங்கிய ஆதரவுக்கு அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
இதுபோல இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜாவை அவரது கட்சி அலுவலகத்தில் சந்தித்து நன்றி தெரிவித்துக்கொண்டார்.
இந்த சந்திப்புகளை முடித்துக்கொண்டு முதலமைச்சர் விஜய் இரவு தமிழ்நாடு அரசு இல்லத்துக்கு திரும்பினார்.
இந்நிலையில் முதலமைச்சர் விஜய் தங்கியிருந்த தமிழ்நாடு அரசு இல்லத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்குள்ள உணவகத்தில் அனைவரும் அமர்ந்து சாப்பிடும்போது சிறிய தீ விபத்து ஏற்பட்டது.
புகைமூட்டம் ஏற்பட்டதையொட்டி காவலர்கள் உடனடியாக அங்கிருந்தவர்கள் வெளியேற்றினர். உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
முதலமைச்சர் விஜய் புறப்பட்ட சில நிமிடங்களில் உணவகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.