திருப்பதி:
ஆந்திரா மாநிலம், அனந்தபூர் மாவட்டம், கோரண்டாவை சேர்ந்தவர் திவ்யா (வயது 18). இவர் இன்டர்மீடியட் முடித்து உள்ளார்.
நேற்று ஏழுமலையானை தரிசிக்க தனது குடும்பத்தினருடன் திருப்பதிக்கு வந்தனர். திவ்யா அலிப்பிரியிலிருந்து திருமலைக்கு நடைபாதை வழியாக நடந்து சென்றார்.
திவ்யாவின் பெற்றோர்கள் பின்னால் நடந்து வந்தனர். திவ்யா மட்டும் படிக்கட்டுகளில் வேகமாக ஏறி சென்றார். காளி கோபுரம் அருகே வந்தபோது திவ்யா தனது பையில் இருந்த குளிர்பானத்தை எடுத்து குடித்தார்.
அப்போது திவ்யா மயங்கி விழுந்தார். இதனை கண்ட அவரது பெற்றோர் அலறியடித்துக் கொண்டு வந்து திவ்யாவுக்கு முதல் உதவி சிகிச்சை அளித்தனர்.
இருப்பினும் திவ்யா சில நிமிடங்களிலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருமலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து திவ்யாவின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பதி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் பக்தர்கள் இடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.