இந்தியா

கேரளாவில் பாட்டிலில் பெட்ரோல் வழங்க தடை- மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவு

பெட்ரோல் பங்குகளில் இனி யாருக்கும் பாட்டிலில் பெட்ரோல் வழங்க கூடாது என்று மாநில அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.மீறுவோருக்கு அபராதமும், சிறை தண்டனையும் விதிக்கப்படும் என எச்சரித்து உள்ளது.

திருவனந்தபுரம்:

கேரளாவில் கடந்த வாரம் ஓடும் ரெயிலில் 3 பயணிகள் எரித்து கொலை செய்யப்பட்டனர்.

நொய்டாவை சேர்ந்த ஷாருக் ஷைபி என்ற வாலிபர் 4 பாட்டில்களில் பெட்ரோல் வாங்கி வந்து அதனை பயணிகள் மீது ஊற்றி தீவைத்துள்ளார். வழக்கமாக ரெயில்களில் எளிதில் தீப்பிடிக்கும் பொருள்களை எடுத்து செல்வது தடை செய்யப்பட்டு உள்ளது. அதன்பின்பும் ஷாருக் ஷைபி, பாட்டிலில் பெட்ரோல் எடுத்து சென்று, அதனை பயணிகள் மீது ஊற்றி தீவைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து ரெயில்களில் இதுபோன்று யாராவது எளிதில் தீப்பிடிக்கும் பொருள்களை எடுத்து செல்கிறார்களா? என்பதை கண்காணிக்க ரெயில்வே போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் பெட்ரோல் பங்குகளில் இனி யாருக்கும் பாட்டிலில் பெட்ரோல் வழங்க கூடாது என்று மாநில அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதனை மீறுவோருக்கு அபராதமும், சிறை தண்டனையும் விதிக்கப்படும் என எச்சரித்து உள்ளது.

அரசின் இந்த உத்தரவு காரணமாக இனி இருச்சக்கர வாகனங்களில் செல்வோர் எங்காவது பெட்ரோல் தீர்ந்து விட்டால் பெட்ரோல் பங்க் வரை வாகனத்தை தள்ளிக்கொண்டே சென்றுதான் பெட்ரோல் வாங்க வேண்டும். பாட்டிலில் வாங்க சென்றால் அபராதத்திற்கு ஆளாவார்கள். இது இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT