ராணுவ ஹெலிகாப்டர் விபத்து 
இந்தியா

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 2 ராணுவ அதிகாரிகள் உடல்கள் அடையாளம் கண்டுபிடிப்பு

பிபின் ராவத், மதுலிகா தம்பதியினரின் மகள்கள் கிருத்திகா மற்றும் தாரிணி கலந்துகொண்டு பெற்றோரின் உடல்களுக்கு மலர் தூவி இறுதிச்சடங்கு செய்தனர்.

மாலை மலர்

புதுடெல்லி:

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.

பிபின் ராவத் உள்ளிட்ட 3 பேரின் உடல்கள் இறுதிச்சடங்குக்காக டெல்லி கொண்டு செல்லப்பட்டன. அங்கு பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் மற்றும் பல்வேறு மாநில முதல் மந்திரிகள் இறுதி மரியாதை செலுத்தினர்.

இறுதிச்சடங்கின்போது கூர்க்கா துப்பாக்கிப் படைப்பிரிவினர் 17 துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதை அளித்தது.

இந்நிலையில், ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 2 ராணுவ அதிகாரிகள் உடல்கள் இன்று அடையாளம் கண்டறியப்பட்டது என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

ராணுவ அதிகாரிகள் சாய் தேஜா மற்றும் விவேக் குமார் ஆகியோரது உடல்களை இன்று அதிகாலை அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

இறுதிச்சடங்கிற்காக அவர்களது உடல்கள் விமானம் மூலம் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்துள்ளது.