இரவுநேர ஊரடங்கு 
இந்தியா

கொரோனா பரவல் எதிரொலி - கர்நாடகாவில் அமலானது இரவுநேர ஊரடங்கு

கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில், கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பான உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற்றது.

பெங்களூரு:

கொரோனா தொற்று மற்றும் ஒமைக்ரான் பரவல் அச்சம் காரணமாக பல்வேறு மாநிலங்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்துள்ளன.

இதற்கிடையே, டிசம்பர் 28 முதல் இரவுநேர ஊரடங்கை அமல்படுத்த கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. 28-ம் தேதி முதல் 10 நாட்களுக்கு இரவு 10 மணியில் இருந்து காலை 5 மணி வரை 144 விதியின் கீழ் தடை உத்தரவு அமலில் இருக்கும் என கர்நாடகா சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தெரிவித்துள்ளார்.

கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையில் நடந்த உயர்மட்டக்குழு கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் கொரோனா தடுப்பு தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவினர் பங்கேற்றனர்.

144 தடை உத்தரவு போடப்படுவதால் புத்தாண்டு கொண்டாட்ட விருந்து நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. ஓட்டல்கள், உணவகங்களில் 50 சதவீத இடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என அமைச்சர் சுதாகர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், கர்நாடகாவில் இரவுநேர ஊரடங்கு நேற்று அமலானது. இரவில் செல்லும் வாகனங்களை பணியில் உள்ள போலீசார் நிறுத்தி, சோதனை செய்து பின்னரே அவற்றை செல்ல அனுமதிக்கின்றனர்.

இதையும் படியுங்கள்...கேரளாவில் இன்று புதிதாக மேலும் 2,472 பேருக்கு கொரோனா