உயிரிழப்பு 
இந்தியா

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க அலிபிரி நடைபாதையில் சென்ற புதுமாப்பிள்ளை உயிரிழப்பு

அலிபிரி நடைபாதையில் பக்தர்களுக்கு எதிர்பாராத விதமாக ஏற்படுகிற உடல் நலப்பிரச்சினைகளுக்கு சிகிச்சை அளிக்க திருப்பதி தேவஸ்தானம் மருத்துவமனை அமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மாலை மலர்

திருப்பதி:

திருப்பதி அருகே உள்ள செட்டிப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் காவேரி மோகனகிருஷ்ணா (வயது30). இவருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

புதுமாப்பிள்ளையான மோகன கிருஷ்ணா தனது குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக பாத யாத்திரை புறப்பட்டார். அலிபிரி நடைபாதை வழியாக திருமலையை நோக்கி சென்று நடந்து கொண்டிருந்தார்.

மலைபாதையில் நடுவழியில் சென்றபோது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. வலியால் துடித்த அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார்.

அவருடன் சென்ற உறவினர்கள் மோகன கிருஷ்ணாவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருமணமான 5 மாதத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழந்ததால் குடும்பத்தினர் கண்ணீர் விட்டு, கதறி அழுதனர்.

அலிபிரி நடைபாதையில் ஆங்காங்கே பக்தர்களுக்கு எதிர்பாராத விதமாக ஏற்படுகிற உடல் நலப்பிரச்சினைகளுக்கு சிகிச்சை அளிக்க திருமலை-திருப்பதி தேவஸ்தானம் மருத்துவமனை அமைக்க வேண்டும் என அவருடைய குடும்பத்தினரும் பக்தர்களும் கோரிக்கை விடுத்தனர்.