பரிசு சீட்டுடன் வடமாநில தொழிலாளி எஸ்.கே. படேஷ் 
இந்தியா

கேரள மாநில லாட்டரியில் ரூ.75 லட்சம் பரிசு பெற்ற வடமாநில தொழிலாளி போலீஸ் நிலையத்தில் தஞ்சம்

வேலைக்கு செல்லும் வழியில் சோட்டாக் கணிக்கரையில் சாலையோர லாட்டரி கடையில் ஒரு சீட்டு வாங்கியதாக கூறினார். விபரம் தெரியவந்ததும் தன்னை யாராவது தாக்கி பரிசு விழுந்த சீட்டை பறித்து சென்று விடுவார்களோ என பயப்படுவதாக தொழிலாளி கூறினார்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் மூவாற்று புழா பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு வடமாநில தொழிலாளி ஒருவர் பதறியபடி ஓடி வந்தார்.

போலீஸ் நிலையத்தில் இருந்த போலீசார் அவரை ஆசுவாசப்படுத்தி மூச்சிறைக்க ஓடி வந்ததன் காரணம் பற்றி விசாரித்தனர். அப்போது அவர் தனது பெயர் எஸ்.கே. படேஷ், கொல்கத்தாவில் இருந்து இங்கு கூலி வேலைக்கு வந்ததாக தெரிவித்தார்.

வேலைக்கு செல்லும் வழியில் சோட்டாக் கணிக்கரையில் சாலையோர லாட்டரி கடையில் ஒரு சீட்டு வாங்கியதாக கூறினார். தான் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு முதல் பரிசான ரூ.75 லட்சம் விழுந்திருப்பதாக கூறினார்.

இது பற்றிய விபரம் தெரியவந்ததும் தன்னை யாராவது தாக்கி பரிசு விழுந்த சீட்டை பறித்து சென்று விடுவார்களோ என பயப்படுவதாக கூறினார். இதனால் இன்று இரவு போலீஸ் நிலையத்திலேயே தங்கி கொள்கிறேன் என்றும் கூறினார்.

அவருக்கு ஆறுதல் கூறிய போலீசார், பரிசு விழுந்த சீட்டை பார்த்தனர். பின்னர் அவருக்கு அந்த சீட்டை வங்கியில் டெபாசிட் செய்வது பற்றிய விபரங்களை எடுத்து கூறினர்.

அதற்கான ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தனர். அதன்பின்பே இயல்பு நிலைக்கு திரும்பிய வடமாநில தொழிலாளி போலீஸ் நிலையத்தில் இருந்து வீடு திரும்பினார்.

இதுபற்றி அவர் கூறும்போது, பரிசு தொகை கிடைத்ததும் உடனே ஊர் திரும்ப உள்ளதாகவும், அந்த பணத்தை கொண்டு வாழ்க்கையை வளமாக்கி கொள்வேன் எனவும் தெரிவித்தார்.