திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் பத்தனம் திட்டா அருகே பிடனபிலவு அனிகாடு பகுதியில் பஷீர் என்பவர் டீ கடை நடத்தி வருகிறார்.
பஷீர் நேற்று வழக்கம் போல் டீ கடையை திறந்து வியாபாரம் செய்து கொண்டு இருந்தார். அப்போது கடையில் சில வாடிக்கையாளர்கள் வந்தனர். அவர்கள் கடையின் உள்பகுதியில் அமர்ந்து டீ குடித்தனர்.
திடீரென கடையில் குண்டுவெடிக்கும் சத்தம் கேட்டது. கடையில் இருந்த பொருட்கள் சிதறி விழுந்தன, மேலும் கடை முழுவதும் குபுகுபு வென கரும்புகை சூழ்ந்தது. மேலும் கடையும் தீப்பற்றி எரிந்தது.
இதில் கடையில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்து அலறினர். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் இச்சம்பவம் பற்றி கீழ வைப்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அங்கிருந்து போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் கடைக்குள் படுகாயம் அடைந்த நிலையில் இருந்த டீ கடை உரிமையாளர் பஷீர், சாக்கோ மற்றும் 4 பேரை மீட்டு கோட்டயம் அரசு மருத்து கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதில் பஷீர் மற்றும் சாக்கோ ஆகிய 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக கீழ வைப்பூர் போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். டீ கடையில் குண்டு வெடித்தது எப்படி? நாச வேலை காரணமா? இதில் தொடர்புடையவர்கள் யார்? என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது.
இது தொடர்பாக போலீசார் கூறுகையில், முழுமையான விசாரணைக்கு பின்னரே குண்டு வெடிப்புக்கான காரணம் பற்றிய முழு விவரம் தெரிய வரும், என்றனர். இந்த சம்பவத்தால் அனிகாடு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.