திருவனந்தபுரம்:
கேரளாவின் மலபார் பகுதிகளில் உள்ள கோவில்களில் நடக்கும் விழாவில் சிறுவர்கள் தீயில் குதிக்கும் சடங்கு நடை பெறும்.
இந்த சடங்கு இந்து புராண கதைகளின்படி மலபார் கோவில்களில் நடத்தப்படும். அதாவது அரக்கர் குலத்தை சேர்ந்த இரண்யகசிபுவின் மகன் பிரகலாதன், விஷ்ணு பக்தனாக இருப்பார். இதை விரும்பாததால் அவரை எரியும் தீயில் வீசுவார்கள். 101 முறை பிரகலாதனை தீயில் வீசிய பின்பும் அவர் ஒவ்வொரு முறையும் தீயில் இருந்து உயிருடன் எழுந்து வருவார்.
இதனை சித்தரிக்கும் வகையில் கேரளாவின் மலபார் பகுதியில் உள்ள கோவில்களில் தீ சாமுண்டி என்ற பெயரில் சிறுவர்கள் தீயில் குதிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
இன்றும் இதுபோன்ற சடங்குகள் இங்குள்ள கோவில்களில் நடைபெறும். இதில் சிறுவர்கள் உடலில் இலை, தழைகளை கட்டிக்கொண்டு தீயில் குதிப்பார்கள். இந்த சடங்கில் ஈடுபடும் சிறுவர்களின் உயிருக்கு ஆபத்து என்று மலபார் பகுதியை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. மேலும் இது தொடர்பான விசாரணை வருகிற 22-ந்தேதி நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது.