திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் ஓல்ட் சிட்டியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நீண்ட தலைமுடியை கணவர் ஆசைப்பட்டதால் ஸ்டைலாக வெட்டுவதற்காக அபிட்ஸ் பகுதியில் உள்ள பியூட்டி பார்லருக்கு சென்றார்.
அங்கிருந்த அழகுக்கலை நிபுணர் அந்த பெண்ணின் தலைமுடிக்கு ஒருவித எண்ணெய் தடவி முடியை வெட்டினார்.
ஆனால் எண்ணெய் தடவிய உடன் முடி கொட்ட ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் உச்சந்தலையில் இருந்த முடிகள் அனைத்தும் உதிர்ந்தது.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண் வீட்டிற்கு ஓடினார். வீட்டில் இருந்த கணவர் மனைவியின் தலையில் முடி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதனால் கணவன்-மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் பாதிக்கப்பட்ட அந்த பெண் தனது தலையில் இருந்து உதிர்ந்த தலைமுடியை கையில் எடுத்துக்கொண்டு போலீஸ் நிலையம் சென்றார்.
தனது தலைமுடியை இழக்க காரணமான பியூட்டி பார்லர் மீது புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் ஐதராபாத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.