கைது 
இந்தியா

குழாயில் தண்ணீர் பிடித்தால் 50 செருப்படி என்று ஆணவம்- முன்னாள் பஞ்சாயத்து தலைவர் கைது

குழாயில் தண்ணீர் பிடித்தால் 50 செருப்படி என்று முரசு அடித்து அறிவிப்பு வெளியிட்ட முன்னாள் பஞ்சாயத்து தலைவரையும், அவரது உதவியாளரையும் போலீசார் கைது செய்தனர்.

முசாபர்நகர்:

உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகர் பவ்டிகுர்த் பகுதியில் பவ்டி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், பண்ணை அல்லது ஆழ்துளை கிணறு பகுதியில் தலித் மக்கள் குழாயில் தண்ணீர் பிடித்தால் 50 செருப்படி வழங்கப்படும் என்றும், ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் ஆணவமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அவரது உத்தரவின்பேரில் கிராமத்தில் முரசு அடித்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பால் கிராமத்தில் பரபரப்பு மற்றும் பதட்டம் ஏற்பட்டது.

இந்த அறிவிப்பை வெளியிட்டு ஒரு நபர் முரசு அடிப்பது போன்ற காட்சிகள் அங்கிருந்த கேமராவில் பதிவாகியுள்ளது.

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இதன் காரணமாக இந்த சம்பவத்துக்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இதுதொடர்பாக போலீசாரும் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த அறிவிப்பை வெளியிட்டதற்காக முன்னாள் பஞ்சாயத்து தலைவரையும், அவரது உதவியாளரையும் போலீசார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT