டெல்லியில் காற்று மாசுபடுதலை குறைக்கும் வகையில் 150 இ- பஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. டெல்லியில் அடுத்த பத்து ஆண்டுகளில் மின்சார பேருந்தை பெறுவதற்காக டெல்லி அரசு ரூ. 1,862 கோடி ஒதுக்கியுள்ள நிலையில் மத்திய அரசு ரூ. 150 கோடி வழங்கியுள்ளது.
இந்நிலையில், டெல்லி முதல் -மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று இந்திர பிரஸ்தா டிப்போவில் இருந்து 150 இ - பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார். இதையடுத்து போக்குவரத்து துறை மந்திரி கைலாஷ் கெலாட் உடன் ஒரு பேருந்தில் ஏறிய முதல் மந்திரி ராஜ்காட் கிளஸ்டர் பேருந்து நிலையம் வரை பயணித்தார்.
மேலும், ஒரு வருடத்தில் இரண்டாயிரம் இ- பேருந்துகளை பெறுவதே இலக்கு என்று அரவிந்த் ஜெக்ரிவால் தெரிவித்தார்.
இது குறித்து டெல்லி முதல்- மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், “ இ- பேருந்துகள் டெல்லியில் மாசுப்பாட்டை குறைக்கும். இது உங்கள் பேருந்து. அதனால் மக்கள் பேருந்தை கவனமாக பார்த்து கொள்ள வேண்டும்.
ஆண்டோலன் நாட்களில் நான் குளிரூட்டப்பட்ட பேருந்துகளில் பயணம் செய்தேன். ஆனால், ஏர்கண்டிசன் அவ்வளவு வலுவாக இல்லை. இன்று இ- பேருந்தில் பயணம் செய்தபோது மக்கள் அதிகமாக இருந்தும் ஏர்கண்டிசன் அதிகமாகவே இருந்தது. இன்றிலிருந்து மே 26-ந் தேதி வரை மக்கள் இ- பேருந்தில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று கூறினார்.