திருப்பதி:
ஆந்திர மாநிலம் சித்தூர் தமிழக எல்லையை ஒட்டியுள்ள கவுண்டன்யா வனவிலங்கு சரணாலயத்தில் 200 காட்டு யானைகள் உள்ளன.
இந்த காட்டு யானைகள் அடிக்கடி பலமனேர் மற்றும் பங்காரு பாளையம் பகுதியில் நடமாடி வருகின்றன.
கடந்த வாரம் பலமனேரிலிருந்து சித்தூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையை கடந்த 3 காட்டு யானைகள் லாரி மோதி பரிதாபமாக இறந்தன.
இதனைத் தொடர்ந்து யானைகள் பாதுகாப்பு குறித்து வனத்துறையினர் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.
இதற்கு இடையே இந்த வழியாக சென்னை பெங்களூர் அதிவிரைவு சாலை பணிகள் நடந்து வருகிறது.
அதிவிரைவு சாலையின் குறுக்கே யானைகள் வருவதை தடுக்க வனத்துறையினர் ஆலோசனை நடத்தினர்.
சென்னை-பெங்களூர் விரைவுச் சாலையில் யானைகள் அதிகளவு கடக்கும் பகுதியில் உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்கப்படும்.
அதிவிரைவுச் சாலையில் எந்த இடத்திலும் யானைகள் வராமல் இருக்க பழைய தண்டவாளங்களை வாங்கி அதனை தடுப்புகளாக மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் சரணாலயத்தை ஒட்டி உள்ள கிராமப் பகுதிகளுக்கும் யானைகள் வருவதை தடுக்க முடியும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.