புதுடெல்லி:
பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் வருகிற 18-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெறும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது.
முன்னதாக எதற்காக இந்த கூட்டம் என்ற தகவல் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் இந்த கூட்டத்தொடரில் பாராளுமன்றத்தின் 75 ஆண்டுகால பயணம் குறித்து முதல் நாளில் விவாதிக்கப்பட உள்ளதாக நேற்று தெரிவிக்கப்பட்டது. பாராளுமன்ற சிறப்பு கூட்டம் தொடங்குவதற்கு முன்பு 17-ந்தேதி அனைத்து கட்சி கூட்டம் நடக்கிறது.
ஒரே நாடு ஒரே தேர்தல், மகளிர் இடஒதுக்கீடு மசோதா உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் இந்த தொடரில் இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் பாராளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் மக்களவை பா.ஜனதா எம்.பி.க்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று கொறடா உத்தரவிட்டு உள்ளார்.
முக்கியமான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கவும், அரசின் நிலைப்பாட்டை ஆதரிக்கவும் அவையில் இருக்குமாறு பா.ஜனதா எம்.பி.க்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.