திருப்பதி:
ஆந்திர முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மாநிலம் முழுவதும் பஸ் யாத்திரை சென்று பிரசாரம் செய்து வருகிறார்.
காளஹஸ்தி அருகே உள்ள நாயுடு பேட்டையில் அவர் பேசியதாவது:-
ஒவ்வொரு மாதமும் 1-ந் தேதி விடிந்தவுடன் தன்னார்வலர்கள் நேரடியாக வீடு வீடாக வந்து முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி தொகை வழங்கி வந்தனர். ஆனால் சந்திரபாபு நாயுடு தனது உறவினரான நிம்ம கட்டா ரமேஷ் மூலம் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்து உதவித்தொகை வழங்குவதை தடுத்து நிறுத்தினார்.
இதனால் வெயிலில் நடக்க முடியாமல் உதவித்தொகை பெற சென்ற 31 முதியவர்கள் உயிரிழந்துள்ளனர்.
31 பேரின் மரணத்திற்கு காரணமான சந்திரபாபு நாயுடு தான் கொலையாளி. கொஞ்சம் ஏமாந்தால் சந்திரபாபு என்கிற சந்திரமுகி உங்கள் ரத்தம் குடிக்க வந்துவிடும் என்பதை நினைவு கொள்ளுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஜெகன்மோகன் ரெட்டியை சந்திரபாபு நாயுடு அரக்கன் என கொடூரமான வார்த்தைகளை பயன்படுத்தி பேசியதால் அவருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் வழங்கியது.
இந்த நிலையில் சந்திரபாபு நாயுடுவை ரத்தம் குடிக்கும் சந்திரமுகி என பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.