கோவா மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது கோவாவில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது.
இதையடுத்து, கோவா சட்டமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் நேற்று கட்சித் தொண்டர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, இதுகுறித்து ப.சிதம்பரம் கூறியதாவது:-
கோவாவில் உள்ளூர்வாசிகள் குறிப்பாக பழங்குடியினர் தங்கள் நில உரிமைகளைப் பாதுகாக்க பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கோவாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், உள்ளூர் மக்களின் நில உரிமையைப் பாதுகாக்கும் சட்டம் இயற்றப்படும்.
நாடு முழுவதும் உள்ள நிலச்சட்டங்கள் குறித்து எனக்குத் தெரியும். கோவாவில் அதற்கான சட்டம் இயற்ற வாய்ப்பு உள்ளது.
காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும், சட்டப்பூர்வமான வழியில் சுரங்கம் மீண்டும் தொடங்கப்படும். காங்கிரஸ் தொகுதி வேட்பாளர்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படியுங்கள்.. பேச்சுவார்த்தைக்கு அமித்ஷா அழைப்பு: நல்லவிதமாக நடந்தால் போராட்டம் வாபஸ்- விவசாயிகள்