கைது 
இந்தியா

திருப்பதி கோவில் அருகே கடத்தப்பட்ட 5 வயது சிறுவன் மீட்பு- கர்நாடகாவை சேர்ந்த பெண் கைது

திருப்பதி கோவில் அருகே கடத்தப்பட்ட 5 வயது சிறுவனை மீட்ட போலீசார் கர்நாடகாவை சேர்ந்த பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே வெங்கடேசன் சுவாதி தம்பதியினர் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு நெற்றியில் திருநாமம் வைத்து அவர்கள் வழங்கும் சில்லரை காசுகளை வைத்து குடும்பம் நடத்தி வருகின்றனர்.

இவர்களது மகன்.கோவர்த்தனன் (வயது 5). கடந்த மாதம் 30ந்தேதி மாட வீதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் திடீரென காணாமல் போனான்.

சுவாதி மகனை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. திருமலை போலீசில் சுவாதி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கு உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

இளம்பெண் ஒருவர் சிறுவனை கடத்திச் செல்லும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.இதையடுத்து போலீசார் சிறுவனை கடத்தி செல்லும் பெண்ணை தேடி வந்தனர்.

இந்த நிலையில் சிறுவனை கடத்தி சென்ற கர்நாடக மாநிலம் மாண்டியாவை சேர்ந்த பவித்ரா நேற்று திருமலைக்கு வந்த சிறுவனை போலீசாரிடம் ஒப்படைத்தார். போலீசார் இளம்பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தினர்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு வீட்டில் சண்டை போட்டுவிட்டு கடந்த மாதம் 30ந்தேதி திருமலைக்கு வந்தேன். தனியாக விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை கடத்திக் கொண்டு வீட்டிற்கு சென்றேன். அங்குள்ளவர்கள் சிறுவனை மீண்டும் திருப்பதியில் விட்டு வரும்படி தெரிவித்தனர்.

இதையடுத்து குழந்தையை போலீசில் ஒப்படைத்தேன் என்றார்.

மீட்கப்பட்ட சிறுவனை அவரது தாய் சுவாதியிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

SCROLL FOR NEXT