காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை 
இந்தியா

காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

தெற்கு காஷ்மீர் ஷோபியான் மாவட்டம் சவுகாம் பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் 2 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்டனர்.

மாலை மலர்

ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளை ஒழிக்க பாதுகாப்பு படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் தெற்கு காஷ்மீர் ஷோபியான் மாவட்டம் சவுகாம் பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர்.

உடனே பாதுகாப்பு படையினரும் அவர்களை நோக்கி பதிலுக்கு துப்பாக்கிசூடு நடத்தினார்கள். சிறிது நேரம் நடந்த இந்த துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

அவர்கள் எந்த இயகத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவில்லை. தப்பி ஓடிய மற்ற பயங்கரவாதிகளை பிடிக்க பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.