இந்தியா

ஆந்திரா அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவி பலாத்காரம்: ஆசிரியர் ஜெயிலில் அடைப்பு

ஆசிரியர் ரெட்டி நாகைய்யா பலமுறை மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்து வந்தார். இதனால் மாணவி கர்ப்பமானார்.நிறைமாத கர்ப்பிணியான மாணவிக்கு கடந்த சனிக்கிழமை கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது.

திருப்பதி:

ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்யசாய் மாவட்டம் கதிரி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 15 வயது மாணவி.

இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 9 மாதங்களுக்கு முன்பு மாணவி ஆசிரியர்கள் ஓய்வு அறைக்கு தண்ணீர் குடிக்க சென்றார்.

அப்போது அங்கிருந்த ஆசிரியர் ரெட்டி நாகைய்யா மாணவியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார்.

இதனால் பயந்து போன மாணவி இது குறித்து வெளியில் யாரிடமும் கூறவில்லை.

இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஆசிரியர் ரெட்டி நாகைய்யா பலமுறை மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்து வந்தார். இதனால் மாணவி கர்ப்பமானார்.

இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியான மாணவிக்கு கடந்த சனிக்கிழமை கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது.

இதையடுத்து அவரது பெற்றோர் மாணவியை அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

மாணவியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்தனர். இதனைக் கேட்ட மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

பிரசவத்தில் மாணவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்தின் போது மாணவிக்கு அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டதால் அவரை மேல் சிகிச்சைக்காக அனந்தபுரம் தலைமை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது குறித்து அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்தினர்.

அவரை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர் ரெட்டி நாகையா மீது போக்சோவில் வழக்கு பதிவு செய்து கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.