ஸ்வப்னா சுரேஷ் 
இந்தியா

கேரள முன்னாள் மந்திரி, சபாநாயகர் மீது சுவப்னா சுரேஷ் பரபரப்பு குற்றச்சாட்டு

வேலை கேட்டு இவர்களிடம் செல்லும் ஏழை பெண்களை தங்களது பாலியல் பசிக்காக படுக்கை அறைக்கு அழைப்பார்கள்.போலீசாரும், குற்றபுலனாய்வு துறை அதிகாரிகளும் முன்னாள் மந்திரி, முன்னாள் சபாநாயகரிடம் தீவிர விசாரணை நடந்த வேண்டும்.

திருவனந்தபுரம்:

கேரளாவில் தங்கம் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டவர் சுவப்னா சுரேஷ். கேரள முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கருடன் நெருக்கமாக இருந்து இதுபோன்ற கடத்தலை சர்வ சாதாரணமாக அரங்கேற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

சமீபத்தில் அவர் ஜாமீனில் வந்த பிறகு முதல்-மந்திரி பினராயி விஜயன் உள்ளிட்ட பலர் மீதும் பல புகார்களை தெரிவித்தார்.

மேலும் தனது சுயசரிதை புத்தகத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயன், அவரது குடும்பத்தினர், முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கர் மற்றும் முன்னாள் மந்திரிகள் குறித்தும், தங்கம் கடத்தல் உள்பட சட்ட விரோத செயல்களில் அவர்களுடைய தொடர்பு குறித்தும் பல தகவல்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த புத்தகம் வெளியான முதல் நாளிலேயே அனைத்து பிரதிகளும் விற்று தீர்ந்த நிலையில், புத்தகத்தின் 2-ம் பதிப்பை வெளியிட தயாராகி வருவதாக சுவப்னா சுரேஷ் தெரிவித்து இருக்கிறார்.

இந்த நிலையில் மலையாள செய்தி சேனல் ஒன்றுக்கு சுவப்னா சுரேஷ் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

முன்னாள் மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் மற்றும் முன்னாள் சபாநாயகர் ஸ்ரீராம கிருஷ்ணன் ஆகிய இருவரும் பெண்பித்தர்கள்.

வேலை கேட்டு இவர்களிடம் செல்லும் ஏழை பெண்களை தங்களது பாலியல் பசிக்காக படுக்கை அறைக்கு அழைப்பார்கள். நான் ஒரு உயர்ந்த பதவியில் இருப்பது தெரிந்தும், என்னையும் படுக்கை அறைக்கு அழைத்தனர். அப்படியென்றால் சாதாரண பெண்களின் நிலையை சிந்தித்து பார்க்க வேண்டும்.

உயர் பதவியில் இருந்து கொண்டு இதுபோன்ற இழிவான செயல்களில் இவர்களால் எப்படி ஈடுபட முடிகிறது. போலீசாரும், குற்றபுலனாய்வு துறை அதிகாரிகளும் முன்னாள் மந்திரி, முன்னாள் சபாநாயகரிடம் தீவிர விசாரணை நடந்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.