இந்தியா

மாணவர்களுக்கு தாறுமாறாக முடிவெட்டிய ஆசிரியை சஸ்பெண்டு

10 மாணவர்களுக்கு தாறுமாறாக முடியை வெட்டினார்.பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பதி:

தெலுங்கானா மாநிலம், கம்பம் மாவட்டம், கல்லூர் அடுத்த பெரம வஞ்சாவில் அரசு பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சிரிஷா என்பவர் ஆங்கில ஆசிரியையாக வேலை செய்து வருகிறார்.

பள்ளிக்கு வரும் மாணவர்கள் தலைமுடியை வெட்டிக்கொண்டு வர வேண்டும் என மாணவர்களிடம் பலமுறை வலியுறுத்தினார்.

ஆனாலும் மாணவர்கள் ஆசிரியை கூறும் அறிவுரையை ஏற்காமல் புள்ளிங்கோ கட்டிங் நீண்ட தலைமுடியுடன் பள்ளிக்கு வந்தனர். இதனைக் கண்டு ஆத்திரம் அடைந்த சிரிஷா கத்திரிக்கோலை எடுத்து வந்து 10 மாணவர்களுக்கு தாறுமாறாக முடியை வெட்டினார்.

உணவு இடைவேளையில் வீட்டிற்குச் சென்ற மாணவர்களின் தலையைக் கண்ட அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். நடந்த சம்பவம் குறித்து மாணவர்கள் பெற்றோர்களிடம் தெரிவித்தனர்.

பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர்.

இதையடுத்து மாணவர்களுக்கு தலைமுடி வெட்டிய ஆசிரியை சிரிஷாவை சஸ்பெண்டு செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.