இந்தியா

பாதாள சாக்கடையில் விழுந்த 2 வயது குழந்தை: 24 மணி நேரத்துக்கு பிறகு சடலமாக மீட்பு

பாதாள சாக்கடையில் 2 வயது ஆண் குழந்தை விழுந்தது. 24 மணி நேரத்துக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டது.

அகமதாபாத்:

குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தின் வைரவ் கிராமத்தில் உள்ள ஒரு பாதாள சாக்கடையில் 2 வயது ஆண் குழந்தை விழுந்ததாக போலீசாருக்கு நேற்று மாலை தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புக் குழுவினர் குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த மீட்புப் பணியில் சுமார் 60 முதல் 70 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

கனரக வாகனம் ஒன்று ஏறி இறங்கியதால் பாதாள சாக்கடை மூடி சேதமடைந்தது. இதனால் இந்த சம்பவம் நிகழ்ந்தது என அதிகாரிகள் தெரிவித்தனர். சுமார் 150 மீட்டர் வரை தேடிப்பார்த்தும் குழந்தை இருக்கும் இடம் தெரியவில்லை. தொடர்ந்து குழந்தையை மீட்கும் பணி நடைபெற்றது.

இந்நிலையில், பாதாள சாக்கடைக்குள் விழுந்த குழந்தை சுமார் 24 மணி நேரத்துக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டது என போலீசார் தெரிவித்தனர்.

பாதாள சாக்கடையில் விழுந்து 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

SCROLL FOR NEXT