இந்தியா

தேர்தல் இலவசங்களுக்கு எதிரான வழக்கை அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

இலவசங்கள் அறிவிப்பு குறித்து குழு அமைத்து ஆய்வு செய்ய உத்தரவிடுவது குறித்து நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும்.

தேர்தல் வாக்குறுதிகளில் இலவசங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பா.ஜ.க. நிர்வாகியும் வக்கீலுமான அஸ்வினி உபாத்யாயா சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 2022-ம் ஆண்டு தொடுத்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கை விரைந்து விசாரணை நடத்த கோரி, மனுதாரர் அஸ்வினி உபாத்யாயா சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வு முன்பு முறையிட்டார். குறிப்பாக, இந்த வழக்கு நீண்ட நாளாக நிலுவையில் இருக்கிறது.

எனவே வழக்கை விசாரணைக்கு பட்டியலிட வேண்டும். மேலும் இலவசங்கள் அறிவிப்பு குறித்து குழு அமைத்து ஆய்வு செய்ய உத்தரவிடுவது குறித்து நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும். அதற்கு எதிர் மனுதாரர்களும் ஒப்புதல் தெரிவித்துள்ளனர் என்று தெரிவித்தார்.

அப்போது பல்வேறு கட்சிகள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில்சிபல், ‘குழு அமைத்து ஆய்வு செய்யும் விவகாரத்தில் எதிர்ப்பு இல்லை’ என்று கூறினார். ஆனால் தலைமை நீதிபதி, முக்கியமான வழக்குகள் பல நிலுவையில் உள்ளன. எனவே இந்த வழக்கை விசாரிப்பது தொடர்பாக பின்னர் பரிசீலிப்பதாக தெரிவித்தார்.