புதுடெல்லி :
கொரோனாவுக்கு பலியானவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க கோரிய மனு மீதான விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு மேற்கொண்டு வருகிறது.
நேற்று நடைபெற்ற விசாரணையின் போது நீதிபதிகள், சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டும் கொரோனாவுக்கு இறந்தவர்களின் விவரங்களை அளித்துவிட்டு அவை பற்றிய புள்ளிவிவரங்களை எந்த மாநிலமும் முறையாக அளிக்கவில்லை.
கொரோனாவுக்கு பெற்றோரை இழந்த குழந்தைகளின் விவரங்களை இன்றில் இருந்து ஒரு வாரத்துக்குள் அந்தந்த மாநில சட்டப்பணிகள் சேவை ஆணையத்திற்கு அந்தந்த மாநில அரசு வழங்க வேண்டும். தவறும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சுப்ரீம் கோர்ட்டு் உத்தரவின்படி நிவாரணம் பெறுவதை உறுதி செய்ய மாநில சட்டப்பணிகள் சேவை ஆணையத்துடன் இணைந்து செயல்படும் வகையில் ஒரு தனி அதிகாரியை நியமிக்க மாநில அரசுகளுக்கு உத்தரவிடுகிறோம் என தெரிவித்தனர்.
தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் 38 ஆயிரம் குடும்பங்களுக்கு இதுவரை தலா 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.