இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் குழந்தை கடத்தல் அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு காவல் நிலையங்களும் முதற் கட்ட விசாரணைக்கு காத்திருக்காமல் எஃப்.ஐ.ஆர்-ஐ உடனடியாக பதிவு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், “முதல் தகவல் அறிக்கையில் குழந்தை கடத்தல் தொடர்பான பாரதிய நியாய சம்ஹிதாவின் உரிய பிரிவு கட்டாயமாக இடம்பெற வேண்டும்” எனவும் குறிப்பிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 2011ம் ஆண்டு காணாமல் போன குழந்தை தொடர்பான வழக்கை, நீதிபதிகள் அஹ்சானுதீன் அமானுல்லா மற்றும் ஆர்.மகாதேவன் அமர்வு விசாரணை நடத்தியது.
அப்போது, “நாடு முழுவதும் இதுவரை 47,000 குழந்தைகள் காணாமல் போனதன் தீவிரத்தை யாரும் புரிந்து கொள்ளவில்லை. இது ஒரு மிகப்பெரிய பிரச்சினை.
குழந்தை காணாமல் போன வழக்கு ஆட்கடத்தலுடன் தொடர்புடையது என்று காவல்துறை சந்தேகித்தால், உடனடியாக அந்த வழக்கை ஆட்கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்ற வேண்டும்.
பீகாரில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன குழந்தை, கேரளாவில் உள்ள ஒரு குழந்தை காப்பகத்தில் மீட்கப்பட்டது.
எந்தவொரு குழந்தையும் மீட்கப்பட்ட உடனேயே, அதனை ஆதார் சரிபார்ப்புக்கோ அல்லது ஆதார் அட்டை பெறுவதற்கோ அழைத்து செல்லப்பட வேண்டும்.
உரிய சரிபார்ப்புகளுக்கு பிறகு, மீட்கப்பட்ட குழந்தையை தாமதமின்றி குடும்பத்தினரிடம் உடனடியாக ஒப்படைத்ததை மாநில மற்றும் மாவட்ட அளவிலான அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டது.