நீதிமன்ற விசாரணைகளின் ஒலி மற்றும் காணொலி பதிவுகளை உரிய அனுமதியின்றி சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதற்கும், பகிர்வதற்கும் உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்ஷி, மற்றும் வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
டிஜிட்டல் தளங்களில் நீதிமன்ற நடவடிக்கைகளின் ஒலி மற்றும் காணொளிப் பதிவுகளைப் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகளை விதிக்கக்கோரி, செய்தியாளர் ஹர்ஷிதா குரோவர் தாக்கல் செய்த பொது நல மனுவின் அடிப்படையில் இந்த உத்தரவு வந்துள்ளது.
இருப்பினும், செய்தி ஊடகங்கள் மற்றும் அறிக்கையிடல் பணிகளுக்கு இந்த உத்தரவால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் தெளிவுபடுத்தியுள்ளது.
“ஒரு இடைக்கால நடவடிக்கையாக, இந்த நீதிமன்றத்தின் பொதுச் செயலாளர் அல்லது அதிகார வரம்புக்குட்பட்ட உயர் நீதிமன்றங்களின் பதிவாளர் முன் அனுமதியின்றி, நீதித்துறை நடவடிக்கைகளின் ஒலி-ஒளிப் பதிவுகளை சமூக ஊடகங்கள் அல்லது பிற டிஜிட்டல் தளங்களில் பதிவிடுதல், பகிர்தல், மறுபதிவிடுதல், எடிட் செய்தல், மாற்றியமைப்பது, பணமாக்குதல் ஆகியவை செய்யப்படக்கூடாது என்று உத்தரவிடப்படுகிறது.
இது நீதிமன்றத்தின் 24 மணி நேர பொழுதுபோக்கு சேனலாக இருக்க முடியாது.” என அமர்வு தெரிவித்துள்ளது.
மேலும் இதுதொடர்பான வழிகாட்டுதல்கள் கொண்ட அறிக்கையை சமர்பிக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ள நீதிமன்றம்,
விசாரணை தொடர்பாக இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள், நீதித்துறையின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும், நீதிமன்ற நடவடிக்கைகளைத் திரிக்கும் வகையிலும் பயன்படுத்தப்படுவதாக குறிப்பிட்டுள்ளது.