இந்தியா

வெறுப்பு பேச்சுக்கு எதிராக புதிய சட்டம் இயற்ற கோரிய மனு தள்ளுபடி

பி.என்.எஸ்.எஸ். சட்டத்தின் கீழ் வெறுப்பு பேச்சுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உரிய சட்டப்பிரிவுகள் உள்ளன.

நாடு முழுவதும் வெறுப்பு பேச்சை கட்டுப்படுத்தவும், வதந்தி பரப்புவதை தடுக்கவும் கடுமையான புதிய சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு உத்தர விடக்கோரி பா.ஜ.க. வழக்கறிஞர் அஸ்வினி உபத்யாய் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 2021-ம் ஆண்டு ஒரு மனுவை தாக்கல் செய்தார்.

இந்த மனு சுப்ரீம் கோர்ட்டால் விசாரிக்கப்பட்டு அனைத்து வாதங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு வெறுப்பு பேச்சுக்களை கட்டுப்படுத்தவும், நடவடிக்கை எடுக்கவும போதிய சட்டங்கள் உள்ளன.

ஆனால் அதனை செயல்படுத்துவதிலேயே தொய்வு உள்ளது. சட்டங்களை உருவாக்குவது என்பது நாடாளுமன்ற, சட்டமன்றத்தின் அதிகார வரம்பிற்குள்ளானது.

மேலும் எந்த முறையில் சட்டம் இயற்றுவது என்பது அதன் அதிகாரத்தின் கீழானது. எனவே, இந்த விவகாரத்தில் நீதிமன்றங்கள் அரசியலமைப்பு சட்டத்தை விளக்கலாமே தவிர சட்டத்தை இயற்றும்படி கட்டாயப்படுத்த முடியாது. மேலும் பி.என்.எஸ்.எஸ். சட்டத்தின் கீழ் வெறுப்பு பேச்சுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உரிய சட்டப்பிரிவுகள் உள்ளன.

எனவே இந்த விஷயத்தில் சட்டரீதியான வெற்றிடம் எதுவுமில்லை என தெரிவித்த நீதிபதிகள், வெறுப்பு பேச்சு பேசினால் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துவது அவர்களுடைய கடமை. ஒருவேளை வழக்கு பதிவு செய்யாவிட்டால் காவல் துறையையும், நீதிமன்றத்தையும் மக்கள் அணுகலாம் என தெளிவுபடுத்தினார்.

இந்த விஷயத்தை பொறுத்தவரை சுப்ரீம் கோர்ட்டு தற்போது வழிகாட்டுதல்களை வழங்க மறுத்தாலும், வெறுப்புப் பேச்சு மற்றும் வதந்தி பரப்புதல் தொடர்பான பிரச்சனைகள் நாட்டின் சகோதரத்துவத்தையும், அரசியலமைப்பு ஒழுங்கையும் நேரடியாகப் பாதிக்கின்றன.

எனவே வெறுப்பு பேச்சு, வதந்தி பரப்புதல் விஷயத்தில் சமூக மாற்றங்களின் அடிப்படையில் சட்டத்தில் பொருத்தமான திருத்தங்களைக் கொண்டுவருவதோ, அல்லது ஏதேனும் மாற்றங்கள் தேவைப்படுகின்றனவா என்பதை பரிசீலிப்பது என்பது மத்திய அரசின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது. அந்த வகையில் புதிய சட்டம் தேவை என்றால் கொள்கை அடிப்படையில் நாடாளுமன்றம் தான் அதனை முடிவு செய்ய வேண்டும்.

எனவே வெறுப்பு பேச்சை கட்டுப்படுத்தவும், வதந்தி பரப்புதலை தடுக்கவும் புதிய சட்டங்கள் இயற்ற உத்தரவிடக் கோரிய பொது நலமனுவை தள்ளுபடி செய்வதாக தீர்ப்பளித்தது.

அதேவேளையில் இந்த தீர்ப்பின் நகலை அனைத்து சுப்ரீம் கோர்ட்டுகளுக்கும் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள் அமர்வு, தீர்ப்பின் அடிப்படையில் வெறுப்பு பேச்சு வழக்குகளில் உரிய அறிவுறுத்தல்களை சுப்ரீம் கோர்ட்டுகள் வழங்கலாம் எனவும் தீர்ப்பில் கூறியுள்ளது.