இந்தியா

மாணவர்கள் தனியாக இல்லை, நாங்கள் அவர்களுக்கு துணையாக இருக்கிறோம்: ராகுல் காந்தி

நம் நாட்டு மாணவர்களுக்கு ஆதரவாக எதிர்கட்சியினரும் வீதிகளில் இறங்க வேண்டும் என நாங்கள் உணர்ந்தோம்.

இந்தியாவில் பல முக்கிய இடங்களில் நீட் தேர்விற்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், புது டெல்லியில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது இல்லத்தில் இருந்து காந்தி நினைவிடத்திற்கு காங்கிரஸ் கட்சியினருடன் பேரணியாக சென்றார்.

அப்போது பேரணியாக சென்ற ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினரின் வாகனத்தை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

நீட் தேர்வு போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி:

அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-

நம் நாட்டு மாணவர்கள் வீதிகளில் இறங்கி உள்ளனர். எனவே எதிர்கட்சியினரும் வீதிகளில் இறங்க வேண்டும் என நாங்கள் உணர்ந்தோம்.

முதலில் எதிர்கட்சி எம்.பி.க்களான நாங்கள் அனைவரும் இந்தியா கேட் செல்ல விரும்பினோம். ஆனால் எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

பின்னர் நாங்கள் காந்தி நினைவகத்திற்கு சென்று கொண்டிருந்தோம், ஆனால் எங்கள் பேருந்து நிறுத்தப்பட்டது.

மாணவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது என்னவென்றால் நீங்கள் தனியாக இல்லை, நாங்கள் உங்களுக்கு துணையாக இருக்கிறோம்.

நாம் இழந்த மாணவர்களை நினைவுகூரச் செல்கிறோம். நீட் தேர்வுத்தாள் கசிவுக்கு பிறகு, தற்கொலைக்கு தள்ளப்பட்ட அந்த பிள்ளைகளை நினைவுகூர செல்கிறோம்.

மேலும் நீதியை நிலை நாட்டும்படி அமைதியாக போராடிய மாணவர்கள் தாக்கப்பட்டு, இன்று காயங்களுடன் அவதிபட்டு வருகின்றனர். அவர்களுக்கு துணையாக நிற்க செல்கிறோம்.

இந்திய மாணவர்கள் தனியாக இல்லை, ஒட்டுமொத்த எதிர்கட்சியும் அவர்களுடனும் அவர்களின் கோரிக்கைகளுடனும் துணை நிற்கிறது.

நீங்கள் மறக்கப்பட மாட்டீர்கள், நாங்கள் மெளனமாக இருக்கமாட்டோம்.

இவ்வாறு மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறினார்.