இந்தியா

புத்த கயா சென்ற இலங்கை அதிபர்: மகாபோதி கோவிலில் தரிசனம் செய்தார்

இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக நேற்று பிரதமர் மோடியை சந்தித்தார். இன்று புத்த கயா சென்ற இலங்கை அதிபர் மகாபோதி கோவிலில் தரிசனம் செய்தார்.

பாட்னா:

இலங்கை அதிபரான அனுர குமார திசநாயக பதவியேற்ற பிறகு, முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். அவர் நேற்று பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது மற்றும் மீனவர்கள் பிரச்சனை, இலங்கை தமிழர்களுக்கான பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இந்நிலையில், இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக இன்று பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் உள்ள புத்த கயாவுக்குச் சென்றார். அங்கு புத்தரின் புனித தலங்களில் ஒன்றான மகாபோதி கோவிலில் பிரார்த்தனை செய்தார். கோவில் வளாகத்தில் புத்தர் தொடர்புடைய பல இடங்களையும் பார்வையிட்டார். இங்குதான் புத்தர் ஞானம் அடைந்ததாகக் கூறப்படுகிறது.

இலங்கை அதிபரின் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

மகாபோதி கோவில் யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட உலக பாரம்பரிய தலம் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT