இந்தியா

"மோடி ஏன் பேட்டியளிப்பதில்லை தெரியுமா?" - தெற்காசிய அரசியல் விமர்சகரின் கருத்து

மோடி, 10 ஆண்டு கால ஆட்சியில் ஒரு முறை கூட பேட்டியளித்ததில்லைசீனாவின் ஆக்கிரமிப்பு குறித்து கேட்டால் முகத்தை திருப்பி கொள்வார் என்றார் ஜஃப்ரெலாட்

கடந்த 2014ல் முதல்முறையாக பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி.

அவரது முதல் பதவிக்காலம் முடிந்ததும் மீண்டும் 2019ல் பிரதமராக இரண்டாம் முறை பதவியேற்றார்.

காங்கிரஸ் கட்சி அல்லாத, காங்கிரஸ் கட்சியின் ஆதரவை பெறாத ஒரு கட்சியில் இருந்து தொடர்ந்து 2 முறை ஒருவர் பிரதமர் ஆனது நாட்டிலேயே அப்போதுதான் முதல்முறையாக நடந்தது.

இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலிலும் மீண்டும் பிரதமர் வேட்பாளராக பா.ஜ.க.வினால் முன்னிறுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில், 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த ஒருவர் பொதுக்கூட்டங்களில் உரையாற்றுவதும், தொலைக்காட்சியில் மக்களுக்கு செய்தியளிப்பதையும் கடந்து ஊடகவியலாளர்களுக்கு பேட்டியளித்து அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் நடைமுறையை ஒரு முறை கூட கடைபிடிக்கவில்லை.

பலரும் இதனை விமர்சித்து வரும் நிலையில், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உள்ளிட்ட தெற்கு ஆசிய நாடுகளின் அரசியல் குறித்து விமர்சித்து வருபவரான பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 60 வயதான கிறிஸ்டோஃப் ஜஃப்ரெலாட் (Christophe Jaffrelot) இதனை விமர்சனத்துள்ளார்.

கிறிஸ்டோஃப் விமர்சனத்தில் தெரிவித்ததாவது:

பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றும் மோடி, ஊடகவியலாளர்கள் சந்திப்பையோ, கலந்துரையாடல்களையோ ஏன் தவிர்க்கிறார்? ஏனென்றால், அவர் பேச்சில் குறிப்பிடும் "இந்தியா" என ஒரு இந்தியா இல்லவே இல்லை.

இல்லாத ஒரு இந்தியா இருப்பதாக மிக அழகாக நீங்கள் கற்பனை செய்து வைத்துள்ள நிலையில், கற்பனையை உடைக்கும் வகையில் எந்த கேள்வி எழுப்பப்பட்டாலும், அது ஒரு வெற்றிடத்தை காட்டி விடும்.

பொருளாதாரம் சிறப்பாக இல்லை. சீனாவுடனான உறவுமுறை சரியாக இல்லை. இது குறித்து கேட்கப்பட்டால் அவர் முகத்தை திருப்பி கொள்வார்.

சீனா நம் நாட்டை ஆக்கிரமித்துள்ளது என்பதை அவர் எவ்வாறு ஒப்பு கொள்வார்? அவரால் பதில் சொல்ல முடியாது.

அதைத்தான் அவர் மாதந்தோறும் "மன் கி பாத்" (Mann ki baat) நிகழ்ச்சியில் செய்து வருகிறார். அது ஒரு ஒன்வே டிராஃபிக்.

ஆனால், பத்திரிகையாளர்கள் அவரிடம் அவர் நம்பிக்கைக்கு எதிரான கேள்விகளை எழுப்பினால் அவரால் சமாளிக்க முடியாது.

இவ்வாறு கிறிஸ்டோஃப் கூறினார்.