சோனியா காந்தியின் சுயசரிதைப் புத்தகமான ‘பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்’ புத்தகத்தை இந்தியாவில் வெளியிடுவதற்கான ஒப்பந்தத்தில் இருந்து விலகியதாக பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா பதிப்பகம் தெரிவித்திருந்தது.
புத்தகத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ள சோனியா காந்தி ஒப்புக்கொள்ளாததால் இந்தியாவில் அதன் வெளியீட்டிலிருந்து பென்குயின் பதிப்பகம் பின்வாங்கியதாக கூறப்பட்டது. ஆனால் இதற்கு பென்குயின் நிறுவனம் மறுப்பு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இந்தக் காரணம்தான் உண்மை என்றும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆர்எஸ்ஆஸ் குறித்த தகவல்களை எடுக்க சோனியா காந்தி மறுத்ததால்தான் பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் புத்தக வெளியீட்டில் இருந்து பின்வாங்கியதாக காங்கிரஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேசியுள்ள பெயர் குறிப்பிடாத சோனியா காந்தியின் உதவியாளர்களில் ஒருவர்.,
“சோனியா காந்தியின்மீதான மோடியின் விமர்சனங்களை அவர் விரிவாக இப்புதகத்தில் பகிர்ந்திருந்தாகவும், 2004-ல் குஜராத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் சோனியாவை ‘ஜெர்சி மாடு’ என்று அழைத்த ஒரு கருத்தையும் அவர் மேற்கோள் காட்டியதாகவும்” கூறியுள்ளார்.
ஒரு அரசியல்வாதியாக, இந்த விவகாரம் எவ்வாறு கையாளப்பட்டது என்பதை அவர் குறிப்பிடுகிறார், ஆனால் பதிப்பாளர்களுக்கு அதில் சிக்கல்கள் இருந்தன எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சோனியா காந்தி இத்தாலியின் ஒரு சிறிய நகரில் கழித்த தனது குழந்தைப் பருவம் மற்றும் போருக்குப் பிந்தைய வாழ்க்கை நினைவுகள், ராஜீவ் காந்தி உடனான திருமணம், அவரது இழப்பு என தனது வாழ்வின் முக்கிய அங்கங்களை இதில் பகிர்ந்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம். நரவனேவின் 'ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி' என்ற சுயசரிதை நூலை வெளியிடுவதில் இருந்தும் பென்குயின் நிறுவனம் பின்வாங்கியது.
இந்நூலை குறிப்பிட்டு, 2020-ல் லடாக்கில் நடந்த இந்தியா-சீனா ராணுவ மோதல் குறித்து ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் விவாதித்திருந்தார். அந்த விவகாரம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்த, அப்புதக வெளியீட்டில் இருந்து விலகியது பென்குயின் நிறுவனம்.