இந்தியா

சோனம் வாங்சுக் மருத்துவமனையில் அனுமதி: சப்தர்ஜங் ஊழியர்களுடன் அவரது மனைவி வாக்குவாதம்!

"சோனம் வாங்சுக்கின் உடல்நிலை குறித்த மருத்துவப் பரிசோதனை அறிக்கையின் நகலை வழங்காதது ஏன்"

டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 21 நாட்களாகத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பிரபல சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், உடல்நிலை நலிவடைந்ததை அடுத்து டெல்லி போலீசாரால் சப்தர்ஜங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில், மருத்துவமனை வளாகத்தில் சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலிக்கும், அங்கிருந்த மருத்துவமனை ஊழியர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மொபைல் போனுக்கு தடை:

மருத்துவமனையின் அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சோனம் வாங்சுக்கை காண்பதற்காக அவரது மனைவி கீதாஞ்சலி ஜே.ஆங்மோ சென்றார். அப்போது, அவசரப் பிரிவுக்குள் மொபைல் போன் எடுத்துச் செல்ல அங்கிருந்த பாதுகாப்பு மற்றும் மருத்துவப் பணியாளர்கள் அனுமதி மறுத்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த கீதாஞ்சலி, "ஏன் என்னால் எனது கைப்பேசியை உள்ளே கொண்டு செல்ல முடியாது?" என்று அங்கிருந்த ஊழியர்களிடம் காரசாரமாகக் கேள்வி எழுப்பினார். இந்த வாய்மொழித் தகராறு தொடர்பான வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

மருத்துவ அறிக்கை தர மறுப்பா?

பரவி வரும் அந்த வீடியோவில், கீதாஞ்சலியுடன் வந்த மற்றொரு பெண்ணும் மருத்துவமனை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவது தெரிகிறது. சோனம் வாங்சுக்கின் தற்போதைய உடல்நிலை குறித்த மருத்துவப் பரிசோதனை அறிக்கையின் நகலை தங்களுக்கு வழங்காதது ஏன் என்றும் அவர்கள் அங்குள்ள அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

முன்னதாக, தனது கணவருக்கு தங்களின் அல்லது தங்களை கண்காணித்து வந்த மருத்துவர்களின் அனுமதியின்றி எந்தவொரு வாய்வழி மருந்தையோ அல்லது குளுக்கோஸ் மூலமான சிகிச்சையையோ அளிக்கக் கூடாது என கீதாஞ்சலி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சோனம் வாங்சுக்கின் தற்போதைய உடல்நிலை:

சப்தர்ஜங் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி, நீண்ட நாட்களாக உண்ணாவிரதம் இருந்ததால் சோனம் வாங்சுக் உடல் மிகவும் பலவீனமடைந்து, நீர்ச்சத்து குறைபாட்டுடன் காணப்படுகிறார்.

அவருக்கு ரத்த அழுத்தக் குறைவு மற்றும் ரத்த சர்க்கரை குறைவு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், அவரது இதயத் துடிப்பு மற்றும் இசிஜி பரிசோதனை முடிவுகள் சீராக உள்ளன. அவர் தற்போது சுயநினைவுடன் உள்ளார்.

டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படியும், மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரிலுமே சோனம் வாங்சுக் பாதுகாப்புடன் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக டெல்லி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.