உத்தரபிரதேசம் மாநிலத்தில் 10-ம் வகுப்பு தேர்வில் சாதனை படைத்த மாணவியை சமூக வலைதளங்களில் உருவ கேலி செய்து பதிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அம்மாநிலத்தின் சீதாபூரில் உள்ள சீதாபால் வித்யா மந்திர் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி பிராச்சி நிகாம் ஆண்டு இறுதி தேர்வில் 600-க்கு 591 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்தார். இதனால் மாணவியின் கல்வித்திறனை பாராட்டி பலரும் அவரை வாழ்த்தினர்.
அதே நேரத்தில் சமூக வலைதளங்களில் சிலர் மாணவி பிராச்சி நிகாமை உருவ கேலி செய்து பதிவிட்டனர். அந்த மாணவிக்கு முகத்தில் ஆண்கள் போன்று மீசை வளர்ந்திருக்கும் என குறிப்பிட்டு ஏராளமானோர் பிராச்சி நிகாமுக்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டதால் அவரது குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் மாணவியை விமர்சிப்பவர்களுக்கு கண்டனம் தெரிவித்து பயனர்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டனர். எக்ஸ் தளத்தில் ஒரு பயனரின் பதிவில், மாணவி பிராச்சி நிகாமின் கல்வி, புத்திசாலிதனம் தான் கவனத்தை ஈர்க்க தகுதியானது. அவரது தோற்றம் அல்ல என மாணவிக்கு ஆதரவாக பதிவிட்டார். இதே போல சாதனை படைத்த மாணவியை பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை, கேலி செய்யாதீர்கள் என பலரும் பதிவிட்டனர்.