வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்களிக்க தகுதியற்றவர்களின் பெயர்களை நீக்க தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்டும் சிறப்பு தீவிரத் திருத்த நடைமுறையின் படிவத்தில், ஒருவர் அதிகபட்சமாக 5 குழந்தைகளின் விவரங்களை மட்டுமே பதிவு செய்ய முடியும் என்ற வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த வரம்பு நிர்ணயம் தொடர்பாக பேசியுள்ள ஏஐஎம்ஐஎம் தலைவர் அசதுத்தீன் ஓவைசி, தனக்கே 6 குழந்தைகள் இருக்கும்போது, வாக்காளர் சரிபார்ப்புப் படிவத்தில் 5 குழந்தைகளுக்கு மேல் விவரங்களை ஏற்க அதிகாரிகள் மறுப்பது எந்த வகையில் நியாயம் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ஹைதராபாத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய ஒவைசி,
“ஐந்துக்கும் மேற்பட்ட பிள்ளைகள் தங்களுக்கு இல்லை என்று அவர்கள் கூறுகிறார்கள். எனக்கே 6 குழந்தைகள் உள்ளனர். ஏன் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரும் 5-க்கும் மேற்பட்ட உடன்பிறப்புகளை கொண்ட பெரிய குடும்பங்களில் இருந்து வந்தவர்கள்தான்.
ஒருவருக்கு ஆறு குழந்தைகள் இருக்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக, அவர் வாக்களிப்பதைத் தடுக்கும் சட்டம் இந்தியாவில் இல்லை. வாக்களிக்கும் உரிமை என்பது தகுதியுள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ள ஒரு அரசியலமைப்பு உரிமையாகும்.” என தெரிவித்தார்.
மேலும், இந்த எஸ்ஐஆர் மறுஆய்வு செயல்முறையின் போது தங்களின் ஆவணங்களைச் சரியாகச் சமர்ப்பித்து, வாக்காளர் பட்டியலில் இருந்து தங்களின் பெயர்கள் விடுபடாமல் விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.