இந்தியா

அமெரிக்காவில் நடந்த கார் விபத்து: ஆந்திர எம்.எல்.ஏ.-வின் உறவினர்கள் 6 பேர் பலி

எம்.எல்.ஏ. உறவினர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக அமெரிக்கா சென்றனர்.அட்லாண்டாவில் இருந்து டெக்சாஸ் திரும்பிய போது கார் விபத்தில் சிக்கியுள்ளது.

ஆந்திரா மாநிலம் அமலாபுரம் பகுதியை சேர்ந்தவர் நாகேஸ்வர ராவ். இவர் தனது குடும்பத்தினருடன் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக அமெரிக்கா சென்றார்.

அங்கு அவர்கள் உற்சாகத்துடன் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடினார்கள். மறுநாள் அங்குள்ள மிருககாட்சி சாலைக்கு சென்று சுற்றிப் பார்த்தனர். பின்னர் உறவினர் ஒருவர் வீட்டுக்கு சென்று விட்டு மினி வேனில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டு இருந்தனர். டெச்சாஸ் மாகாணம் ஜான்சன் கவுன்ட்டி பகுதியில் வந்தபோது சரக்கு வாகனம் ஒன்று மினி வேன் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் வேனில் பயணம் சென்ற நாகேஸ்வர ராவ், மற்றும் சீதா மகாலட்சுமி, நவீனா, கிருத்திக், இளம் பெண் நிஷிதா உள்பட 6 பேர் பரிதாபமாக இறந்தனர். லோகேஷ் என்பவர் மட்டும் படுகாயத்துடன் உயிர் தப்பினார்.

விபத்து பற்றி அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம்அடைந்த லோகேஷ் மற்றும் சரக்கு வாகனத்தில் வந்த 2 வாலிபர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் சரக்கு வாகனம் தவறான பாதையில் வந்ததே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.

பலியான 6 பேரும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான பொன்னாட வெங்கட சதீஷ்குமார் என்பவரின் உறவினர்கள் ஆவார்கள். இது தொடர்பாக அவர் கூறும்போது 6 பேர் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக தெரிவித்தார்.