திருப்பதி மாவட்டத்தில் டீசல் மற்றும் பெட்ரோல் தட்டுப்பாடு காரணமாக வாகன ஓட்டிகள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
சில பெட்ரோல் நிலையங்களில் 'இருப்பு இல்லை' என்ற அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
விநியோகத்தில் ஏற்பட்ட இடையூறு காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
திருப்பதி மலையில் உள்ள பெட்ரோல் பங்க்குகள் நேற்று திடீரென மூடப்பட்டன. இதனால் சொந்த வாகனங்களில் வந்த பக்தர்கள் சிரமப்பட்டனர். பெட்ரோல் மற்றும் டீசல் கையிருப்பில் இல்லாததால் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.
மாலை நேரத்திலும் நிலையங்கள் திறக்கப்படாததால், சொந்த வாகனங்களில் வந்த பல பக்தர்கள் திருப்பதி மலையிலேயே தங்க வேண்டியிருந்தது. ஒரு நிலையம் மட்டும் இரவில் திறக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் கிடைத்தது. திருப்பதிக்கு கார் உள்ளிட்ட வாகனங்களில் வரும் பக்தர்கள் எச்சரிக்கையுடன் வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி கோவிலில் நேற்று 79,878 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 33,037 பேர் முடிக்காணிக்கை செலுத்தினர். நேரடி இலவச தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். ரூ.3.94 கோடி உண்டியல் காணிக்கை வசூல் ஆனது.